ADDED : ஜூலை 25, 2026 12:30 AM
பெங்களூரு: பஸ் பயணியரிடம், பணம் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து ராமமூர்த்திநகருக்கு, கடந்த 18ம் தேதி, பி.எம்.டி.சி., பஸ் சென்றது. இந்த பஸ்சில் சென்ற பயணி ஒருவர், சட்டை பையில் வைத்திருந்த, 2,000 ரூபாய் திருடப்பட்டது. இதுகுறித்து, விதான் சவுதா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பி.எம்.டி.சி., பஸ்களில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பயணியரிடம், ஒரு கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், பஸ் பயணியரிடம் பணம் திருடிய, கெங்கேரியின் முபாரக் பாஷா, 35, ஜே.ஜே.நகரின் அன்வர் பாஷா, 47, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கூட்டமாக இருக்கும் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்யும் இருவரும், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் சென்று, 'எனக்கு வாந்தி வருகிறது. ஜன்னலோர இருக்கையை கொடுங்கள்' என்று கேட்பர். வாந்தி எடுப்பது போல நடித்து, பணத்தை திருடி செல்வர். மேலும், மூவரை போலீசார் தேடுகின்றனர்.
