ADDED : ஜூலை 03, 2026 10:26 PM
கலபுரகி: போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 'போக்சோ' குற்றவாளி தப்பியோடினார். பின், அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கலபுரகி மாவட்டம், அப்சல்பூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 24. இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 'போக்சோ' சட்டத்தில், அப்சல்பூர் போலீசாரால் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, அப்சல்பூர் போலீஸ் நிலைய லாக் - அப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் அசந்த நேரத்தில், போலீஸ் நிலையத்திலிருந்து மஞ்சுநாத் தப்பினார்.
மஞ்சுநாத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் போலீசார் தீவிரமாக தேடினார். அப்போது, அப்சல்பூரில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் தங்கியிருந்த மஞ்சுநாத், நேற்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கைதி தப்பி செல்லும் போது அப்சல்பூர் போலீஸ் நிலையத்தில் இரவு பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் ரவிதாஸ், ஷிவானந்த், பிரஷாந்த் ஆகிய மூன்று பேரை, எஸ்.பி., சீனிவாசலு சஸ்பெண்ட் செய்தார்.
