ADDED : ஆக 26, 2026 02:53 AM
பெங்களூரு: அதிருப்தியில் இருக்கும் மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக, மூத்த அமைச்சர்கள், 5 பேர் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் உட்பட, 34 பேர் அமைச்சரவையில் இடம் பெற முடியும். தற்போது, 33 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு இடம் காலியாக உள்ளது. அதுவும் பெண் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு ஒதுக்குவது உறுதியாகி விட்டது.
அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.,க்களான பெங்களூரு விஜயநகர் தொகுதி கிருஷ்ணப்பா, அவரது மகனான கோவிந்த்ராஜ்நகர் தொகுதி பிரியாகிருஷ்ணா, ஷிவமொக்காவின் சாகர் தொகுதி பேலுார் கோபாலகிருஷ்ணா உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
கிருஷ்ணப்பா உள்ளிட்டோரின் அதிருப்தி, 2028 தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், அவர்களை சரிகட்டும் வகையில் அமைச்சர் பதவி வழங்க சிவகுமார் முன்வந்துள்ளார். இதற்காக தனது அமைச்சரவையில் உள்ள மூன்று முதல் ஐந்து மூத்த அமைச்சர்களை கழற்றிவிட அவர் திட்டமிட்டு உள்ளார்.
இதுபற்றி கட்சி மேலிடத்திடம் விவாதிக்க, முதல்வர் நாளை டில்லி செல்ல உள்ளார்.
