ADDED : ஜூன் 01, 2026 12:19 AM

சிக்கமகளூரு: மலைப்பாதையில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மரத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற ஆறு பேரும் உயிர் தப்பினர்.
சிக்கமகளூரு ஹொசஹள்ளி அடுத்த மலைப்பகுதியில் உள்ள குறுகலான சாலையில், நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கைமாரா வன சோதனை சாவடி அருகே வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அந்த கார் சாலையை விட்டு விலகி, அருகிலிருந்த வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த மரங்களின் மீது கார் மோதியது. காரின் முன்பக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஆறு பேருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்கள், காரில் இருந்தவர்களை மீட்டு சாலைப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.
தகவல் அறிந்த சிக்கமகளூரு ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு துறையினர் வந்து காரை மீட்டனர்.
பெங்களூரை சேர்ந்த ஆறு வாலிபர்கள், வார விடுமுறை நாட்களை செலவிடுவதற்காக சிக்கமகளூருக்கு வந்தனர். மலைப்பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு பெங்களூருக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.
மலைப்பாதையில் குறுகலான சாலையில், காரை வேகமாக ஓட்டியதே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
