ADDED : செப் 02, 2026 12:58 AM

ஷிவமொக்கா: ஒன்பதாம் வகுப்பு மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொக்கா மாவட்டம், கொப்பாலை சேர்ந்தவர் சிருஷ்டி. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர், தம்பி, தங்கை ஆகியோர் நேற்று முன்தினம் ஸ்ரீராகவேந்திர சுவாமியை தரிசிக்க சென்றனர். கோவிலுக்கு சென்று, வீட்டுக்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மகள் சிருஷ்டி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், துங்கா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உடலை மீட்டனர். மாணவி துாக்கில் தொங்கிய அறையில், அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில், 'என் மரணத்துக்கு நானே காரணம். ஏனெனில், எங்கள் குடும்பத்துக்கு நான் சுமையாக இருக்கிறேன். என் பள்ளி கட்டணத்தை செலுத்தவோ, பள்ளி செலவுகளை பார்க்க அவர்களால் முடியவில்லை. நான் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.
'அம்மாவும், அப்பாவும் சண்டை போடாதீர்கள். தம்பி, தங்கையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். என் தங்கை பிறந்தவுடன், என் பெற்றோர் என்னை நேசிக்கவில்லை. அவர்கள் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டனர். நான் மீண்டும் மனிதராக பிறக்க மாட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
