காங்., அரசின் தோல்வியை கண்டித்து பா.ஜ., சார்பில் பாதயாத்திரை துவக்கம்
காங்., அரசின் தோல்வியை கண்டித்து பா.ஜ., சார்பில் பாதயாத்திரை துவக்கம்
ADDED : செப் 02, 2026 12:58 AM

ராய்ச்சூர்: காங்கிரஸ் அரசின் தோல்வியை கண்டித்து, ராய்ச்சூரில் இருந்து பல்லாரி வரை, பா.ஜ.,வின் பாதயாத்திரை நேற்று துவங்கியது.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த, 189 கோடி ரூபாய் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, செப்டம்பர் 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை ராய்ச்சூரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்த போவதாக பா.ஜ., அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாதயாத்திரை நடக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனாலும், வறட்சியை சமாளிப்பதில் அரசின் தோல்வி, எஸ்.சி., சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட, 53,000 கோடி ரூபாயை வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டது உட்பட அரசின் பல தோல்விகளை கண்டித்து, பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ., தலைவர்கள் அறிவித்தனர்.
ராகுல் கால்பிடிப்பு அதன்படி, நேற்று காலை ராய்ச்சூரின் லிங்கசுகுரில் உள்ள ஜி.கே.ரெசிடென்சி மைதானத்தில் இருந்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாதயாத்திரையை துவக்கி வைத்தார்.
மத்திய கல்வி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எதிர்க்கட்சி தலைவர்கள் அசோக், சலவாதி நாராயணசாமி, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர் பேசுகையில், ''விவசாயிகள், பெண்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசை அகற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இந்த பாதயாத்திரை அரசியல் காரணங்களுக்காக இல்லை. மக்கள் நலனுக்கானது. முதல்வர் சிவகுமாரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதற்கு எடுத்தாலும் ராகுலின் காலை பிடிக்கிறார். இது அவரது முதல்வர் பதவிக்கு பெருமை தருமா... இந்த பாதயாத்திரையில் மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்,'' என்றார்.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
நாகேந்திரா ராஜினாமா செய்ததால், நாங்கள் பாதயாத்திரை நடத்த மாட்டோம் என்று அரசு நினைத்தது. ஆனால், இந்த அரசை அகற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம். தலித் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
எங்கள் போராட்டத்திற்கு பயந்து, நாகேந்திரா ராஜினாமா கடிதத்தை சிவகுமார் பெற்று கொண்டார். இரவு, பகல் தர்ணா நடத்துவோம் என்று கூறியதால் சட்டசபையில் இருந்து முதல்வர் ஓடினார். நாகேந்திராவின் ராஜினாமா எங்களது முதல் வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
