ADDED : பிப் 02, 2026 05:09 AM
பெங்களூரு: பெங்களூரில் கட்டப்பட்ட ஒரே ஆண்டில், ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு, புலிகேசி நகரின், பாட்டரி சாலையில் இருந்த ரயில்வே பாலம், 120 ஆண்டுகள் பழமையானது. குறுகலாக இருந்ததால், புதிதாக கட்ட மத்திய அரசு நிதியுதவி வழங்கியது. பணிகள் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப் பட்டது.
கடந்தாண்டு புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டுக்கும் திறந்து விடப்பட்டது.
கட்டப்பட்ட ஒரே ஆண்டில், பாலத்தின் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. இதை கண்டு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒப்பந்ததாரர்கள் தரமாக பணிகள் நடத்துவது இல்லை. கலப்படமான கட்டுமான பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதை அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை.
பணிகளின் தரத்தை ஆய்வு செய்யாமல், ஒப்பந்ததாரருக்கு பில் தொகை வழங்குகின்றனர். விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தை பார்த்தாலே, எப்போது இடியுமோ என்ற அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, ஜி.பி.ஏ., எனப்படும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவிடம், புகார் அளித்துள்ளனர். பாலத்தை உடனடியாக பழுது பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
