/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காஷ்மீரில் ஷிவமொக்கா நபர் சுட்டுக்கொலை மனைவி, மகன் கண் முன்னே நடந்த பயங்கரம்
/
காஷ்மீரில் ஷிவமொக்கா நபர் சுட்டுக்கொலை மனைவி, மகன் கண் முன்னே நடந்த பயங்கரம்
காஷ்மீரில் ஷிவமொக்கா நபர் சுட்டுக்கொலை மனைவி, மகன் கண் முன்னே நடந்த பயங்கரம்
காஷ்மீரில் ஷிவமொக்கா நபர் சுட்டுக்கொலை மனைவி, மகன் கண் முன்னே நடந்த பயங்கரம்
ADDED : ஏப் 23, 2025 07:42 AM

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற, ஷிவமொக்கா நபர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மனைவி, மகன் கண் முன்னே இந்த பயங்கரம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் மனைவி, மகன், 'எங்களையும் கொன்று விடுங்கள்' என, பயங்கரவாதிகளிடம் கெஞ்சியபோது, 'உங்களை கொல்ல மாட்டோம். போய் மோடியிடம் கூறுங்கள்' என்று சொல்லி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 'மினி சுவிட்சர்லாந்து' என்ற சுற்றுலா தலத்தில் 500க்கும் மேற்பட்ட, சுற்றுலா பயணியர் நேற்று மாலை இயற்கை அழகை ரசித்து கொண்டு இருந்தனர்.
சுட்டு கொலை
அங்கு வந்த நான்கு பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுற்றுலா பயணியரை நோக்கி சுட்டனர். அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணியர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மனைவி பல்லவி, மகன் அபிஷேக்குடன் சுற்றுலா சென்று இருந்த, கர்நாடகாவின் ஷிவமொக்கா டவுன் விஜயநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாத் ராவ், 47, என்பவரை, பயங்கரவாதிகள் பிடித்தனர். அவரை சுட்டுக் கொன்றனர். அங்கு வந்த ராணுவ வீரர்கள், மற்றவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மஞ்சுநாத் ராவ் மனைவி பல்லவி கூறியதாவது:
என் மகன் அபிஷேக் பி.யு.சி., தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தார். எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் ஜம்மு - காஷ்மீருக்கு 19ம் தேதி சென்றோம். ரொம்ப ஆசை, எதிர்பார்ப்புடன் அங்கு சென்றோம். பல இடங்களை சுற்றி பார்த்தோம். நேற்று மினி சுவிட்சர்லாந்து பகுதிக்கு வந்தோம்.
சவாரி செய்ய குதிரையில் ஏறினோம். காலையில் இருந்து மகன் எதுவும் சாப்பிடவில்லை. அவருக்கு உணவு வாங்க, குதிரையில் இருந்து, என் கணவர் இறங்கினார். அப்போது அங்கு வந்த நான்கு பயங்கரவாதிகள், என் கணவரை சுட்டுக் கொன்றனர். எங்களையும் கொன்று விடும்படி பயங்கரவாதிகளிடம் நானும், மகனும் கூறினோம்.
அரசுகள் உதவி
'உங்களை கொல்ல மாட்டோம். பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். என் கணவர் உடலை ஷிவமொக்கா கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
முதல்வர் சித்தராமையா, தலைமை செயலர், மூத்த போலீஸ் அதிகாரிகள் தலைமையில் அவசர கூட்டம் நடத்தினார். மஞ்சுநாத் ராவ் குறித்து தகவல் பெற்றுக் கொண்டார். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்படி, டில்லியில் உள்ள குடியிருப்பு கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்று உள்ள கன்னடர்களை மீட்டு வர, ஐ.பி.எஸ்., அதிகாரி சேத்தன் தலைமையில் 4 பேர் அதிகாரிகள் குழு சென்றுள்ளனர். மஞ்சுநாத் ராவ் உயிரிழப்புக்கு சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -