/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் சாதித்த பெண்
/
அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் சாதித்த பெண்
ADDED : நவ 03, 2025 05:06 AM

பல மருந்து, மாத்திரைகள் எடுத்தும், மகளின் தோல் பிரச்னை தீராததால், பல ஆய்வு செய்து உடலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை முறையில் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் தயாரித்த பெண், தன் வாழ்வில் சாதித்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஸ்மிதா காமத். தகவல் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார். 2013ல் இவரின் 2 வயது மகளுக்கு தோல் பாதிப்பு இருந்தது.
மூல காரணம் பல மருத்துவமனைகளில் ஏறி இறங்கியும் மகளின் தோல் பிரச்னை குணமாகவில்லை. இதற்கான காரணத்தை ஆராய துவங்கியபோது தான், உணவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் தான் காரணம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து, ஸ்மிதா காமத் கூறியதாவது:
என் மகளுக்கு தோல் பிரச்னை ஏற்பட்டபோது, 2012ல் ஆய்வு துவங்கியது. அப்போது தான், நாம் சாப்பிடும் உணவில் பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தும் நம் வாழ்க்கையில் இணைக்கப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்தேன்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்து, பெங்களூரின் கால நிலைக்கு ஏற்ற வகையில் உள்ளூரில் விளைவிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும்.
பிளாஸ்டிக் பை உதாரணமாக, ஒரு சிறிய பெட்டிக்கடையை எடுத்து கொண்டாலும், பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் பையில் வைக்கப் பட்டிருக்கும். நாட்டின் பல பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகளை நீங்கள் வாங்கலாம். ஆனால் இவைகள், உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற நிலையில் விளைந்திருக்காது.
இதை அறிந்தபோது, நம் பெரும்பாலான உடல் பிரச்னைகள் தீர வேண்டும் என்றால், நம் வாழ்க்கை முறையை மாற்றுவதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தேன். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை சாப்பிடுவதற்கு பதில், உள்ளூரில் பயிரிடப்பட்ட பழங்களை சாப்பிட துவங்கினேன்.
இயற்கை உணவு வீட்டில் உள்ள அனைவரும், கேழ்வரகு, சிவப்பு அரிசி, தினைக்கு மாறினோம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் அசைவ உணவு சாப்பிட துவங்கினோம். இதன் பலன் விரைவிலேயே தெரிய துவங்கியது. என் மகளுக்கு இருந்த தோல் பிரச்னை குறைய துவங்கியது; ஆரோக்கியமானார்.
அதுபோன்று, நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்தேன். இதை மாற்றி, இயற்கையான முறையில் தயாரிக்க முடிவு செய்தேன். முதலில் இயற்கையான முறையில் 'கண் மை' தயாரிப்பது குறித்து என் பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
உதயம் ராம்நகர் சென்னபட்டணாவில் 'தேவரு காடு' என்ற பெயரில் இயற்கை முறையில் விவசாய பணியை துவக்கினோம். எங்களை சுற்றி இருந்த விவசாயிகளிடமும், ரசாயனம் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்த வலியுறுத்தினோம். அதன் விளைச்சலை, நாங்களே பெற்று கொண்டோம்.
இதற்கு பல வகையில் ஆதரவு கிடைத்ததால், 'பிராண பூர்ணா' என்ற இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க துவங்கினோம். பெங்களூரு, சென்னை, கோவை, மதுரை, குருகிராம் வரை எங்களின் தயாரிப்புகள் செல்கின்றன.
இந்நகரங்களில் உள்ள எங்கள் 24 பேர் கொண்ட குழுவினர், ஷாம்பு, சோப்பு, சாம்பிராணி, கை கழுவும் திரவம், தரை சுத்தம் செய்யும் பொருட்களை தயாரித்து வருகிறோம். இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சீகைக்காய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவைப்படுவோர் 63616 75254 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

