தண்டவாளம் மீது பாறை ஓட்டுநரால் அசம்பாவிதம் தவிர்ப்பு
தண்டவாளம் மீது பாறை ஓட்டுநரால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஜூன் 21, 2025 11:07 PM

ஹாசன்: கனமழையால் தண்டாளம் மீது பாறை விழுந்திருப்பதை, ரயில் ஓட்டுநர் தொலைவில் இருந்தே கவனித்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஹாசன் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதன் விளைவாக ஆங்காங்கே நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சக்லேஸ்புரா தாலுகாவின் அரெபெட்டா மற்றும் யடெகுமாரி இடையிலான பாதையில், மண் சரிந்து பெரிய பாறை ஒன்று, தண்டவாளம் மீது உருண்டு விழுந்தது. இதில் தண்டவாளம் சேதமடைந்தது.
நேற்று காலையில் இதே பாதையில் பெங்களூரு - கன்னுார் காட் ரயில் வந்து கொண்டிருந்தது. 100 அடி துாரத்தில் வந்தபோதே, தண்டவாளத்தில் பாறை விழுந்திருப்பதை ஓட்டுநர் கவனித்தார். உடனடியாக ரயிலை நிறுத்தினார். அவரது சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ரயில் நின்றதால் நுாற்றுக்கணக்கான பயணியர், ரயில் நிலையத்தில் தங்கினர். இவர்களுக்கு காபி, சிற்றுண்டி வசதியை ரயில்வே அதிகாரிகள் செய்தனர். அவசரமாக செல்ல வேண்டிய பயணியர், வேறு வாகனத்தில் சென்றனர். தண்டவாளம் மீது பாறை விழுந்ததால், பெங்களூரு - முருடேஸ்வரா உட்பட பல்வேறு ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் இருந்த பாறையை அகற்றும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
