/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பீடர் பஸ்'கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை
/
'பீடர் பஸ்'கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை
ADDED : ஜன 03, 2026 07:05 AM

பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையங்களை பயணியர் எளிதில் அடையும் வகையில் இயக்கப்படும் 'பீடர் பஸ்'களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணியர் எளிதில் வந்தடைவதற்காக 'மெட்ரோ பீடர் பஸ்'கள் எனும் சிறிய அளவிலான எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது, பி.எம்.டி.சி.,யின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 83 மெட்ரோ நிலையங்களில் 55ல் பீடர் பஸ் சேவை உள்ளது.
இந்த வகை பஸ்களுக்கு பயணியர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஒரு நாளைக்கு 1.50 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இருப்பினும், இந்த வகை பஸ்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
எனவே, பஸ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், புதிய வழித்தடங்களில் பஸ் சேவை அமல்படுத்த வேண்டும் எனவும் பயணியர் கோருகின்றனர். இருப்பினும், பி.எம்.டி.சி., எந்த ஒரு முனைப்பும் காட்டாமல் மவுனம் காத்து வருகிறது.
இது குறித்து பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பீடர் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பி.எம்.டி.சி., நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இருப்பினும், பீடர் பஸ் சேவை இல்லாத மெட்ரோ நிலையங்களில் விரைவில் சேவை அமல்படுத்தப்படும். இதுகுறித்து, மாநில அரசிடம் தெரிவிக்கப்படும். அடுத்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதியை அறிவிக்க கோருவோம். விரைவில் பயணியரின் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

