/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
/
சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி
ADDED : பிப் 13, 2026 05:34 AM
பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடத்த அனுமதி அளித்து, ஆர்.சி.பி., ரசிகர்களுக்கு கர்நாடக அரசு நல்ல செய்தியை வழங்கி உள்ளது.
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், கடந்த ஆண்டு ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல்முறையாக கோப்பையாக கைப்பற்றியது. இதனை கொண்டாடும் வகையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மைதானத்தின் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், விசாரணை குழுவை அரசு அமைத்தது.
இந்த குழு அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், மைதானத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த, அரசு தடை விதித்தது.
கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவராக வெங்கடேஷ் பிரசாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து, சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த முயற்சி எடுத்தார். துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை அடிக்கடி சந்தித்து பேசினார். ஜான் மைக்கேல் குன்ஹா அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்த முயற்சி எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டிக்கு அனுமதி அளிப்பது பற்றி, சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, அனுமதி அளிக்கப்பட்டது. போட்டி நடக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை, உள்துறை அமைச்சகம், ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளது.
இதுதவிர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை மார்ச் 6 முதல் மார்ச் 27ம் தேதி வரை நடத்தவும், 2026 - 2027ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் 6ம் தேதி, சித்தராமையா தாக்கல் செய்வார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
அரசு பஸ்சில் இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க, பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

