அமைச்சரவை விஸ்தரிப்பு தாமதம் பிரச்னையில்லை என்கிறார் காதர்
அமைச்சரவை விஸ்தரிப்பு தாமதம் பிரச்னையில்லை என்கிறார் காதர்
ADDED : ஜூலை 04, 2026 11:20 PM

உத்தரகன்னடா: ''தற்போதுள்ள 14 அமைச்சர்களே, 34 அமைச்சர்களுக்கான வேலையை செய்கின்றனர். அமைச்சரவை விஸ்தரிப்பு தாமதமாவதால், எந்த பிரச்னையும் இல்லை,'' என சுகாதாரத்துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.
உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அமைச்சரவை இன்னும், முழுமையாக நிரப்பப்படவில்லை. 34 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 14 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களே, 34 அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்கின்றனர். அமைச்சரவை விஸ்தரிப்பு தாமதமாவதில் எங்களுக்கோ அல்லது கட்சியிலோ எந்த வருத்தமும் இல்லை.
முதல்வர் சிவகுமாரும், காங்கிரஸ் மேலிட தலைவர்களும், அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து, சரியான நேரத்தில் முடிவு செய்வர். தற்போதுள்ள அமைச்சர்கள், பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்கின்றனர்.
கர்நாடக காங்கிரசில், அதிருப்தி, கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுவதில், உண்மை இல்லை. எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாகவே உள்ளனர். ஓர் அரசில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர் பதவி வழங்க முடியாது.
கட்சியின் மூத்தவர், ஜாதி, மாவட்டம் வாரியாக உன்னிப்பாக கவனித்து, அதற்கு தக்கபடி தகுதியானவர்கள் அமைச்சர்களாக தேர்வு செய்யப்படுவர்.
அடுத்த இரண்டு ஆண்டுகள், முதல்வர் சிவகுமாரின் தலைமையில், நாங்கள் செயல்படுவோம். மாநில மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
