ராணுவத்தில் சேருவோருக்கு ஜிம்கானா மைதானத்தில் பயிற்சி
ராணுவத்தில் சேருவோருக்கு ஜிம்கானா மைதானத்தில் பயிற்சி
ADDED : ஜூலை 04, 2026 11:20 PM
தங்கவயல்: ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அம்பேத்கர் ஸ்டேடியம் என்ற ஜிம்கானா மைதானத்தில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பிக்க துவங்கி உள்ளனர்.
தங்கவயல் ஜிம்கானா மைதானம், புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதனால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இங்கு காலை, மாலை வேளைகளில் ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி செய்கின்றனர்.
ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு, தேவையான பயிற்சியை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரகாஷ் இலவசமாக அளித்து வருகிறார். இவர் ஏற்கனவே, பெமல் தொழிற்சாலை ஸ்டேடியத்தில் பயிற்சி அளித்து வந்தார். இவரிடம் பயிற்சி பெற்ற 19 பேர், 2025ல் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.
பிரகாஷ் கூறுகையில், ''இளைஞர்களை நல்வழிப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. போதைக்கு அடிமையாகி விடாமல் தடுக்கிறது. விளையாட்டில் கவனம் செலுத்த துவங்கி விட்டால், உடல் நலன் மீது தான் கவனம் இருக்கும். 7 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
''மொபைல் போன், இருசக்கர வாகனங்கள் மீது மோகம் அதிகரித்து வருவதால் சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. பெற்றோர், தம் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,'' என்றார்.
இம்மைதானத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கும் கருணாமூர்த்தி கூறுகையில், ''கால்பந்து மூலமாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
' 'ஏற்கனவே பெமல், ரயில்வே, ஐ.டி.ஐ., - ஹெச்.ஏ.எல்., தொழிற்சாலைகளில் தங்கவயல் வீரர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. எனவே, தங்கவயல் இளைஞர்கள், விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும்,'' என்றார் .
ஓட்டப்பந்தய வீரர் வைஷ்ணவ சாகர் கூறுகையில், ''ஜிம்கானா மைதானம் மிக பழமையானது. இது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
தங்கவயலில், 'அல்டிமேட் மாரத்தான்' ஓட்டம், வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் பலரும் பங்கேற்க வேண்டும் என்று தங்கவயல் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் கேட்டுக் கொண்டுள்ளார்.
