'விபி ஜி ராம்ஜ ி ' திட்ட லோகோ போட்டி: தட்சிண கன்னடா வாலிபருக்கு ரூ.50,000
'விபி ஜி ராம்ஜ ி ' திட்ட லோகோ போட்டி: தட்சிண கன்னடா வாலிபருக்கு ரூ.50,000
ADDED : ஜூலை 04, 2026 11:21 PM

தட்சிண கன்னடா: மத்திய அரசின், 'விபி ஜி ராம்ஜி' திட்டத்திற்கான, 'லோகோ' வடிவமைக்கும் போட்டியில் பங்கேற்ற தட்சிண கன்னடா மாவட்ட வாலிபருக்கு 50,000 ரூபாய் பரிசு வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது.
மத்திய அரசு, நடப்பாண்டு, விபி ஜி ராம்ஜி என்ற புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்திற்கான லோகோவை வடிவமைக்க, மத்திய ஊரக வளர்ச்சி துறை, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதில், தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரின் ராம்பிரசாத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தோர் இணையதளம் மூலம் சின்னங்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இத்திட்டத்துக்கான லோகோ தேர்வு, ஜூன் 29ம் தேதி டில்லியில் நடந்தது. இதில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் ராம்பிரசாத் வடிவமைத்த லோகோ தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு 50,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் வழங்கினார். உடன், மாநில அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே இருந்தார்.
விருது குறித்து ராம்பிரசாத் கூறியதாவது:
மார்ச் இறுதி வாரத்தில் லோகோவை வடிவமைக்க துவங்கினேன். மார்ச் 30ல் கடைசி தேதி என்று அறிவித்திருந்தனர். அந்த கால கட்டத்தில், 20 சதவீதம் மட்டுமே உருவாக்கியிருந்தேன்.
இனி ஒன்றும் செய்ய முடியாது என நினைத்த போது, ஏப்., 1ம் தேதி மீண்டும் இணையத்தை பார்த்தபோது, நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் இருந்தது.
உற்சாகம் அடைந்த நான், மீண்டும் லோகோவை வடிவமைக்க துவங்கினேன். பல வடிவங்களை தயாரித்து, ஒரு லோகோவை ஏப்., 4ல் அனுப்பினேன். அது தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி, கல்லுாரியில் படிக்கும்போதே ஓவியத்தில் சிறந்து விளங்கிய இவருக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்ததால், இவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
