ADDED : ஜூலை 04, 2026 11:22 PM

பெலகாவி: தங்களின் வீட்டு குடிநீர் இணைப்பை பஞ்சாயத்து ஊழியர்கள் துண்டித்து உள்ளதால், கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தம்பதி மனு வழங்கி உள்ளனர்.
பெலகாவி மாவட்டம், கித்துார் தாலுகாவின் கித்துார் கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் ருத்ரப்பா. இவரது மனைவி ஸ்ருதி. இவர்கள், நேற்று காலையில் இரண்டாம் நிலை தாசில்தாரிடம், மனு வழங்கினர்.
அதில், 'தனிப்பட்ட விரோதம் காரணமாக, எங்கள் வீட்டிற்கான குடிநீர் இணைப்பை, கித்துார் நகர பஞ்சாயத்து ஊழியர்கள் துண்டித்துள்ளனர்.
ஏற்கனவே, எங்கள் உறவினர்கள் உட்பட பலரின் தொல்லைகளால் சோர்வடைந்து உள்ளோம்.
'இது குறித்து பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது குடிநீர் இல்லாமல் நான்கு நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். வாழ வேண்டும் என்ற ஆசை போய்விட்டது. கருணை கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்.
'இல்லையெனில் வரும் 6ம் தேதி முதல் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்' என குறிப்பிட்டு உள்ளனர்.
