ஒரே குடும்பத்தின் மூவர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
ஒரே குடும்பத்தின் மூவர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்
ADDED : ஜூலை 04, 2026 11:22 PM

கொப்பால்: கடன் தொல்லையால் மனம் நொந்து, ஒரே குடும்பத்தின் மூவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் பிரசாந்த் நகரில் வசித்தவர் பிரகாஷ் ராய்க்கர், 54. இவரது மனைவி பிரபா, 46. இவர்களுக்கு ஷஷாங்க், 21, என்ற மகன் உள்ளார். பிரகாஷ் ராய்க்கர், கங்காவதி நகரில் தங்க நகைக்கடை வைத்துள்ளார்.
தொழிலுக்காக இவர், வங்கி மற்றும் தனியாரிடம் நான்கு கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதற்கான வட்டிச்சுமை அதிகரித்தது. வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையே வங்கியில் கடன் வாங்கிய சிலருக்கு, பிரகாஷ் ராய்க்கர் உத்தரவாதம் கொடுத்திருந்தார். அவர்கள் கடனை அடைக்காததால், அந்த கடன் சுமையும் பிரகாஷ் ராய்க்கர் தலையில் விழுந்தது.
கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால், 2021ம் ஆண்டு, நாகராஜ் என்பவருக்கு, பிரகாஷ் ராய்க்கர் தன் வீட்டை விற்று விட்டார். வீட்டை விற்றாலும் நடப்பாண்டு பிப்ரவரி வரை, இதே வீட்டில் அவர் வசித்து வந்தார்.
இந்த வீட்டின் மீது வங்கியில் கடன் வாங்கிய நாகராஜ், கடனை அடைக்கவில்லை. எனவே வீட்டுக்கு வங்கியினர் 'சீல்' வைத்தனர். இதனால் பிரகாஷ் ராய்க்கர் குடும்பத்தினர், வேறு வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தனர். கோடிக்கணக்கில் கடன் இருந்ததால், அடைக்க முடியாமல் திணறினர்.
கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால், மனம் நொந்த குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலையில் கங்காவதியின், பிரசாந்த் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர்.
வீடு சீல் வைக்கப்பட்டிருந்ததால், பின் புறம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த கங்காவதி டவுன் போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டனர்.
இது குறித்து, எஸ்.பி., ராம் அரசித்தி கூறியதாவது:
ஒரே குடும்பத்தின் மூவர், கங்காவதியின், பிரசாந்த் நகரில் தற்கொலை செய்து கொண்டனர். தம்பதியின் மகன் ஷஷாங்க், பெங்களூரில் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான், இவர் சொந்த ஊருக்கு வந்தார்.
முதற்கட்ட விசாரணையில், பிரகாஷ் ராய்க்கர் குடும்பத்தினருக்கு, கடன் தொல்லை இருந்தது. இதுவே அவர்களின் தற்கொலைக்கு காரணம் என்பது தெரிகிறது. இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்ததாக, தகவல் உள்ளது. ஆனால் உறுதியாக தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கிறோம். அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
