காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தாக்கிய வாலிபர்
காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை தாக்கிய வாலிபர்
ADDED : ஜூலை 04, 2026 11:23 PM

சிக்கமகளூரு: காதலுக்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு விஜயபுராவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை, ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த ரோஹித், 25, ஒருதலையாக காதலித்து வந்தார். சிறுமிக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்தார். இதனால், சிறுமி மனமுடைந்தார். இது குறித்து, தனது பெ ற்றோரிடமும் தெரிவித்தார்.
அவரது பெற்றோரிடமும், சிறுமியை காதலிப்பதாக கூறி ரோஹித் தொல்லை கொடுத்தார். இதற்கு பயந்தே, சிறுமியை அவரது பெற்றோர் கோடைக்கால விடுமுறையின் போது வெளியூருக்கு அனுப்பி வைத்தனர். விடுமுறை முடிந்து ஜூன் மாதம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதால், சிறுமி மீண்டும் சிக்கமகளூருக்கு திரும்பினார். ரோஹித், சிறுமிக்கு மீண்டும் காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
சிக்கமகளூரு மாவட்ட மைதானத்தில் நேற்று தனியாக நின்றுகொண்டிருந்த சிறுமியை பார்த்த ரோஹித் மீண்டும் தொல்லை கொடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார்.
இதனால், ஆத்திரமடைந்த அவர் சிறுமியை சரமாரியாக தாக்கினார். இதில், சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இருப்பினும், சிறுமியை தொடர்ந்து காலால் எட்டி உதைத்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். அவர் தப்பியோட முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை துரத்தி பிடித்து, 'தர்ம அடி' கொடுத்தனர். 'அக்கா படை' போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ரோஹித்தை கைது செய்து அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
