ADDED : செப் 19, 2026 02:21 AM

- நமது நிருபர் -: பெங்களூரின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று தொன்னை பிரியாணி. தொன்னையில் சூடான பிரியாணியை வைத்து பரிமாறும் போது, இலையின் மணம், பிரியாணியுடன் சேர்ந்து வரும் தனித்துவமான வாசனை, அனைவரையும் கட்டி இழுக்கும்.
தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி 1/2 கிலோ
சிக்கன் 1/2 கிலோ
பச்சை மிளகாய் 5
இஞ்சி, பூண்டு பேஸ்ட் 3 டீஸ்பூன்
புதினா ஒரு கைப்பிடி
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் 2
தயிர் அரை கப்
மசாலா பொருட்கள் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை முதலில் மிக்சியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். அடுத்து, பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். இதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். சிக்கன், தயிர், உப்பு சேர்த்து வதக்கவும்.
இதில், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில், 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் சீரக சம்பா அரிசியை சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு, 20 நிமிடங்கள் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் 15 நிமிடங்கள் 'தம்' வைக்கவும். அவ்வளவு தான் சுவையான பெங்களூரு ஸ்பெஷல் தொன்னை பிரியாணி தயார். இதை தொன்னையில் வைத்து பரிமாறி, சாப்பிடும் போது அருமையாக இருக்கும்.
