/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு விமானம் அவசர தரையிறக்கம்
/
பெங்களூரு விமானம் அவசர தரையிறக்கம்
ADDED : ஏப் 06, 2026 04:35 AM
தேவனஹள்ளி: வெடிகுண்டு என எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர், விமானத்தின் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்டதால், பெங்களூரில் இருந்து டில்லி புறப்பட்ட வி மானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 183 பயணியருடன், இண்டிகோ விமானம் டில்லிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணி ஒருவர், கழிப்பறைக்கு சென்றார். அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு என்று எழுதப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
விமானத்திற்குள் இருந்த பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானிகள், பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.
பயணியரின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. எதுவும் சிக்கவில்லை. பயணியரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விட்டு, விமானத்திற்குள் சோதனை நடத்திய போது வெடிபொருட்களோ, சந்தேகத்திற்கு இடமான பொருட்களோ சிக்கவில்லை. இதனால் யாரோ வேண்டும் என்றே டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு என எழுதி பீதியை கிளப்பியது தெரிந்தது. சோதனைக்கு பின், விமானம் மீண்டும் டில்லிக்கு புறப்பட்டு சென்றது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரில், விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விசாரணை நடக்கிறது.

