புதிய பஸ்களை இயக்காததால் பா.ஜ., - எம்.பி., அதிருப்தி
புதிய பஸ்களை இயக்காததால் பா.ஜ., - எம்.பி., அதிருப்தி
ADDED : ஜூலை 18, 2026 12:12 AM

பெங்களூரு: ''குறைந்தபட்சம் பஸ்களை இயக்கவும், நிர்வகிக்கவும் மாநில அரசிடம் பணம் இல்லையா,'' என்று பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:
மத்திய அரசு அனுமதித்துள்ள, 4,500 இ - பஸ்களை மாநில அரசு இன்னும் சாலையில் இறக்காதது ஏன். பஸ்கள் துாசி படிந்து கிடக்கின்றன. குறைந்தபட்சம் பஸ்களை இயக்கவும், நிர்வகிக்கவும் மாநில அரசிடம் பணம் இல்லையா?
ஓட்டுநர்கள் சீரற்ற பஸ் இயக்கம், விபத்துகளை காரணம் காண்பித்து, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பது சரியல்ல. இது மூக்கின் பிரச்னைக்கு மூக்கையே வெட்டுவது போன்றதாகும். ஒரு பக்கம் பயணிக்க பஸ்கள் இல்லை. மற்றொரு பக்கம் சாலையில் பாதுகாப்பு இல்லை.
பெங்களூரில் வசிப்போர், பஸ்களுக்காக மணிக்கணக்கில் பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டுமா. 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பெண் பயணியர் எண்ணிக்கை, 150 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், 3,700க்கும் அதிகமான பஸ்கள் பற்றாக்குறையாக உள்ளன.
மாநில அரசு கும்ப கர்ண துாக்கத்தில் இருந்து எழுந்து, புதிய பஸ்களை இயக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
