ADDED : ஜூலை 18, 2026 12:13 AM

பெங்களூரு: பயணியரின் பாதுகாப்புக்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் ஏற வருவோரில் சிலர் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயல்வது சமீபமாக அதிகரித்து உள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சிலர் தடுமாறி தண்டவாளங்களில் விழுகின்றனர்.
இதை தடுக்க ஊதா, பச்சை, மஞ்சள் ஆகிய மூன்று வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை தடுப்புகளை அமைக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நடைமேடை தடுப்புகள் தானியங்கி முறையில் செயல்படக்கூடியவை. ரயில் நடைமேடைக்கு வந்தவுடன் மட்டுமே கதவு திறக்கும். மற்ற நேரத்தில் கதவுகள் மூடியே இருக்கும். இதனால், தண்டவாளங்களில் யாரும் விழ முடியாது.
இதற்காக, 1,274 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
