/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அக்காவின் கையை கட்டி கணவரிடம் ஒப்படைத்த தம்பி
/
அக்காவின் கையை கட்டி கணவரிடம் ஒப்படைத்த தம்பி
ADDED : ஜன 25, 2026 05:16 AM
சிக்கமகளூரு: கணவர் வீட்டுக்கு செல்ல முடியாது என, பிடிவாதம் பிடித்த அக்காவின் கையை, அவரது தம்பி, துப்பட்டாவால் கட்டி வைத்து, கணவருடன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரை சேர்ந்த இளம் பெண்ணை, சில மாதங்களுக்கு முன், சிக்கமகளூரில் உள்ள இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். ஏதோ காரணத்தால் கணவருடன் சண்டை போட்ட இளம்பெண், கோபித்து கொண்டு பெங்களூரில் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
அக்காவை சமாதானம் செய்து, கணவர் வீட்டில் விடுவதற்காக நேற்று காலையில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் அழைத்து சென்றார். ஹாசன் வரும் வரை மவுனமாக இருந்த அப்பெண், அதன்பின், நான் கணவரின் வீட்டுக்கு செல்லமாட்டேன் என, கூறி தம்பியுடன் சண்டை போட்டார். பஸ்சில் இருந்து இறங்கவும் முயற்சித்தார். அப்போது துப்பட்டாவால், அக்காவின் கையை கட்டி, தம்பி அமர வைத்தார்.
சிக்கமகளூரு பஸ் நிலையத்தை அடைந்ததும், அங்கு காத்திருந்த பெண்ணின் கணவரிடம், அக்காவை ஒப்படைத்தார். அப்போதும் அப்பெண் முரண்டு பிடித்தார். பஸ்சில் அக்காவும், தம்பியும் சண்டை போட்டதை, சில பயணியர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
ஆரம்பத்தில் இளம்பெண்ணை, தம்பி பலவந்தமாக அழைத்து செல்வதாக நினைத்து, சக பயணியர் அவரை திட்டினர். பெண் மீது பரிதாபம் காட்டினர். ஆனால் பஸ்சில் இருந்து இறங்கிய பின்னரே, தன் அக்காவை கணவருடன் சேர்க்கவே, தம்பி போராடியது புரிந்தது.
அக்கா, தம்பியின் பெயர், முகவரி உட்பட மற்ற விபரங்கள் தெரியவில்லை. சிக்கமகளூரு நகர் போலீஸ் எல்லையில் சம்பவம் நடந்திருப்பதால், போலீசார் தகவல் சேகரிக்கின்றனர்.

