ADDED : செப் 17, 2026 03:11 AM
பெலகாவி: சொத்து தகராறு காரணமாக, சொந்த சகோதரர்களால் தந்தை மற்றும் மகள் கொலை செய்யப்பட்டனர்.
பெலகாவி மாவட்டம், கித்துார் தாலுகாவின் அவராதி கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா குந்தரகி, 67. ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மகள் சசிகலா, 26. ருத்ரப்பாவுக்கும், அவரது இரண்டு சகோதரர்களுக்கும் இடையே, பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்தது.
சொத்து தொடர்பாக, மனு அளிக்க ருத்ரப்பா தன் மகள் சசிகலாவுடன், நேற்று காலை அவராதி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
இதை அறிந்த இரண்டு சகோதரர்களும், சகோதரரின் மகன் ஒருவரும் அங்கு வந்தனர். அரிவாளால் ருத்ரப்பாவையும், அவரது மகளையும், மூவரும் வெட்டி கொன்று விட்டு தப்பியோடினர்.
பட்டப்பகலில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலேயே நடந்த இரட்டை கொலையால், அவராதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு சென்ற கித்துார் போலீசார், கொலையான தந்தை மகள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்; கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
