ADDED : செப் 17, 2026 03:10 AM
துமகூரு: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், புதுமண தம்பதி உயிரிழந்தனர்.
துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின், ஹுனசேகட்டே கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷன், 25. இவருக்கும் இதே கிராமத்தின் உஷாராணி, 21, என்பவருக்கும் சில நாட்களுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்கள் வெளியே செல்வதற்காக, நேற்று காலை பைக்கில் புறப்பட்டனர்.
சிராவின், துவாராளு பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது.
மோதிய வேகத்தில், பைக் நொறுங்கியது. இதில் பயணித்த புதுமண தம்பதி, சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர், நிற்காமல் தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவத்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து, அங்கு வந்த சிரா போலீசார், தம்பதியின் உடல்களை மீட்டனர். பைக்கை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சம்பவத்துக்கு காரணமான ஓட்டுநரை தேடுகின்றனர்.
