ADDED : ஏப் 30, 2026 11:42 PM

தார்வாட்: புத்த சன்னியாசி ஒருவர், மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்தார். இவர் கொலையானதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தார்வாட் புறநகர், ஹளியாலா சாலை அருகில், நேற்று முன்தினம் மதியம், அடையாளம் தெரியாத புத்த சன்னியாசி, சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தார்வாட் ஊரக போலீசார், உடலை மீட்டனர்.
முதலில் வாகனம் மோதி இவர் இறந்திருக்கலாம் என, போலீசார் கருதினர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், இது விபத்து அல்ல, கொலை என்பது தெரிந்தது. அவர் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. அதன்பின் அவரை பற்றிய தகவலை, போலீசார் சேகரிக்க துவங்கினர்.
கொலையாகி கிடந்தவர் உத்தரகன்னடா மாவட்டம், முன்டகோடாவை சேர்ந்த தாஷி தோன்டு, 39, என்பது தெரிந்தது. இவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து, உடலை இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்.
முன்டகோடுவில் இருந்து, தாஷி தோன்டு, தார்வாடுக்கு ஏன் வந்தார், இவருடன் தொடர்பில் இருந்தது யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலைக்கு காரணம் முன் விரோதமா அல்லது பண விஷயமா என்பது, விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.
