வீடு கட்டுமானம் சரியில்லை என கூறி கொத்தனார் தம்பி அடித்து கொலை
வீடு கட்டுமானம் சரியில்லை என கூறி கொத்தனார் தம்பி அடித்து கொலை
ADDED : ஜூலை 18, 2026 12:15 AM

நெலமங்களா: வீடு கட்டுமானம் சரியில்லை என கூறி, கொத்தனாரின் தம்பி அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா கிட்டானஹள்ளியில் வசிப்பவர் மஞ்சுநாத், 38; கொத்தனார். கிட்டானஹள்ளி கிராமத்தில் வசிக்கும் தேவராஜ் என்பவரின் வீடு கட்டுமான பணிகளை, மஞ்சுநாத் செய்து வந்தார்.
வீடு கட்டும் பணி நடந்து வரும் நிலையில், கட்டுமான பணி சரியாக இல்லை என்று தேவராஜும், அவரது குடும்பத்தினரும் கூறினர்.
மேலும், அதற்காக, தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி மஞ்சுநாத்திடம் கேட்டார். பணம் கொடுக்க அவர் மறுத்தார்.
இதனால் நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத்துக்கும், தேவராஜ் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. மஞ்சுநாத்தை இரும்பு கம்பி, மரக்கட்டையால் தாக்க முயன்றனர்.
அந்த வழியாக வந்த மஞ்சுநாத்தின் தம்பி ரவி, 35, தன் அண்ணனை காப்பாற்ற முயன்றார். தேவராஜ் குடும்பத்தினர், ரவி மீது இரும்பு கம்பி, மரக்கட்டையால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
வீட்டின் உரிமையாளர் தேவராஜ் உட்பட நான்கு பேர் மீது, மாதநாயக்கனஹள்ளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடுகின்றனர்.
