நேர்மையான அரசியல்வாதியாக இன்று இருக்க முடியாது: சித்து
நேர்மையான அரசியல்வாதியாக இன்று இருக்க முடியாது: சித்து
ADDED : செப் 01, 2026 03:13 AM

துமகூரு: ''நேர்மையான, எளிமையான அரசியல்வாதியாக இருப்பது, இன்றைய அரசியலில் கஷ்டம். இன்றைய அரசியல் சூழ்நிலை, அவலமாக உள்ளது,'' என, முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மூத்த அரசியல் தலைவர் வீரண்ணா நினைவு நாளை முன்னிட்டு, துமகூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
இன்றைய அரசியல் சூழ்நிலை மோசமாக உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டு வருவதே, மூத்த அரசியல்வாதி வீரண்ணாவுக்கு, நாம் செலுத்தும் உண்மையான கவுரவமாகும்.
எனக்கு 80 வயதாகிறது. தற்போதைக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன் என்பது தெரியாது. இன்றைய அரசியல் நடைமுறை அசுத்தம் அடைந்துள்ளதால், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, முடிவு செய்துள்ளேன். ஆனால் அரசியலில் நீடிப்பேன்.
தேர்தல் நடக்கும் போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை மட்டும் செலவிட வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் அது நடக்காத விஷயமாகும். இப்போது நடக்கும் தேர்தலுக்கும், 1983ல் நடந்த தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இதற்கு முன் லோக்சபா தேர்தலில் போட்டியிடும்படி, எனக்கு கட்சி வாய்ப்பு அளித்தது. ஆனால், நான் மறுத்தேன். 1991ல், லோக்சபா தேர்தலில் கொப்பால் தொகுதியில் போட்டியிட்டு, 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். அப்போது ராமகிருஷ்ண ஹெக்டேவும் தோற்றார். அப்போதே நான் மீண்டும் லோக்சபா தேர்தலில், போட்டியிட கூடாது என, முடிவு செய்தேன்.
வீரண்ணா நேர்மையான, எளிமையான அரசியல்வாதி. அவரை போல இருப்பது, இன்றைய அரசியலில் கஷ்டம். தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வர மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
