ADDED : நவ 16, 2025 11:18 PM
சிக்கமகளூரு: சாலையை கடந்த யானை மீது, கார் மோதியதில் கார் நொறுங்கியது. அதில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் ஆடுவள்ளி அருகில் உள்ள பூரதமனே கிராமத்தில் வசிப்பவர் பிரதீப். இவர் பணி நிமித்தமாக என்.ஆர்.புராவுக்கு, நேற்று முன் தினம் வந்திருந்தார். பணி முடிந்த பின், இரவு ஊருக்கு காரில் புறப்பட்டார்.
ஆடுவள்ளி கிராமத்தின் வனப்பகுதி சாலையில் செல்லும் போது, இரண்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. ஒரு யானை சென்று விட்டது. ஒரு யானை சாலை நடுவில் திடீரென நின்றது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த பிரதீப்பின் கார், யானை மீது மோதியது. மோதிய வேகத்தில் யானை கார் மீது விழுந்தது. பயந்து போன யானை, அங்கிருந்து எழுந்து வனத்துக்குள் ஓடிவிட்டது.
யானை விழுந்ததில் பாரம் தாங்காமல், கார் சின்னாபின்னமானது. பிரதீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
