/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 சிறுமியர் பலாத்காரம் 5 சிறுவர்கள் மீது வழக்கு
/
2 சிறுமியர் பலாத்காரம் 5 சிறுவர்கள் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2026 06:16 AM
ஹூப்பள்ளி: இரண்டு சம்பவங்களில், இரு சிறுமியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், நேற்று அளித்த பேட்டி:
ஹூப்பள்ளி நகரின் சஹரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி, தன் பெற்றோருடன் வசிக்கிறார். இதே பகுதியில், 14 முதல் 15 வயது வரையிலான மூன்று சிறுவர்கள் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன், பெற்றோர் வெளியே சென்றதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
மிரட்டல் இதை கவனித்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் சென்று ஏதோ காரணத்தை கூறி, சிறுமியை ஆளில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். அதை வீடியோவும் எடுத்து கொண்டான்.
மறுநாள் அந்த வீடியோவை காட்டி, அச்சிறுவனின் இரண்டு நண்பர்களும், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதுபோன்று, மூன்று பேரும் மிரட்டியே, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
நடந்த விஷயத்தை சிறுமி, தன் வீட்டினரிடம் கூறவில்லை. நேற்று முன் தினம் சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடலின் சில இடங்களில் அதிகமான வலி இருந்தது. இதை பார்த்த தாய், மகளிடம் விசாரித்த போது, சிறுவர்கள் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததை கூறினார். உடன் சஹரா போலீஸ் நிலையத்துக்கு சென்று, தாய் புகார் அளித்தார்.
போலீசார் மூன்று சிறுவர்களையும் அழைத்து விசாரித்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். போலீஸ் வசம் உள்ள மூன்று சிறுவர்களில், இருவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். மற்றொருவர் படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளோம்.
ஈவ் டீசிங் ஹூப்பள்ளி நகரின், அசோக்நகரில் ஏழாம் வகுப்பு மாணவி, பள்ளியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொண்டு, வீட்டுக்கு செல்லும் போது, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், பின் தொடர்ந்து சென்று ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதை கண்டித்த மாணவியின் கன்னத்திலும் அறைந்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து, மாணவி தன் பெற்றோரிடம் கூறினார். அவர்களும் சிறுவர்களை கண்டித்து அறிவுரை கூறினர். இதனால், கோபமடைந்த சிறுவர்கள், ரவுடிகளை சிறுமியின் வீட்டுக்கு அழைத்து சென்று அவளையும், தந்தையையும் தாக்கினர். சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்தனர். இரண்டு மாணவர்கள் உட்பட, நால்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

