/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முன்ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு காங்., நாகேந்திராவுக்கு நோட்டீஸ்
/
முன்ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு காங்., நாகேந்திராவுக்கு நோட்டீஸ்
முன்ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு காங்., நாகேந்திராவுக்கு நோட்டீஸ்
முன்ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு காங்., நாகேந்திராவுக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 23, 2026 05:57 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திராவுக்கு முன்ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்து உள்ளது. விசாரணைக்கு ஆஜராக நாகேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா, 51. இவர், கர்நாடக பழங்குடியினர் நல துறை முன்னாள் அமைச்சர் ஆவார். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் இவரை சி.பி.ஐ., கைது செய்தது. தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்த வழக்கில், நாகேந்திராவின் நெருங்கிய ஆதரவாளரான விஸ்வநாத் என்பவர் வீட்டில், கடந்த 1ம் தேதி சி.பி.ஐ., சோதனை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராக நாகேந்திராவுக்கும் சம்மன் அனுப்பியது. மீண்டும் கைதாகி விடுவோம் என்ற பயத்தில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் வாங்கினார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது. மனு மீது நேற்று விசாரணை நடந்தது. நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரித்தார்.
சி.பி.ஐ., வக்கீல் பிரசன்ன குமார் வாதிடுகையில் கூறியதாவது:
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் பண மோசடியில் தான் ஈடுபடவில்லை என்று கூறி, ஜாமின் கிடைத்ததாக, முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கூறி உள்ளார். இந்த கருத்தே தவறானது.
ஆணையத்தில் முறைகேடு செய்த பணத்தை, மும்பையில் வசிக்கும் ஒரு பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு மாற்றி உள்ளனர். அவர் தனக்கு தேவையான நகைகளை வாங்கி உள்ளார். அந்த பெண்ணையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். பிரதிவாதி முன்னாள் அமைச்சர் என்பதும், அரசு கருவூலம் தவறாக பயன்படுத்தப்படுவதும் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாதத்தை கேட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக நாகேந்திராவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

