வறட்சி, பருவமழை, குடிநீர் பிரச்னை அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை
வறட்சி, பருவமழை, குடிநீர் பிரச்னை அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை
ADDED : ஜூலை 18, 2026 11:05 PM
பெங்களூரு: ''மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரம், பருவமழை, குடிநீர் உட்பட பல முக்கிய பிரச்னைகள் குறித்து இன்று காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாளை (இன்று) அவசர கூட்டம் அழைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன், வறட்சி நிலவரம் குறித்து விவாதிக்க மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில், மழை காலத்தில் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும்; வறட்சி ஏற்படும்போது, மக்கள் பெருமளவில் பட்டினி கிடப்பதாக, அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தவிர்க்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும்.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மழை அளவு உட்பட பல தகவல்கள் புள்ளிவிபரங்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. மாண்டியா மற்றும் வேறு எந்த மாவட்டமும் இந்த நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது.
நீர்தேக்கங்களின் நீர் இருப்பை சரிபார்த்த பின், விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கப்படும். அதேவேளையில் விவசாயத்துக்கு குடிநீரை பயன்படுத்திய பின், விதைப்பு, நடவு பணிகளுக்கு நீர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது.
காவிரி, துங்கபத்ரா நீர் பகிர்வு குறித்து அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் நெருக்கடி உள்ளது. நீர்தேக்கங்கள் நிரம்பிய பின், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் வழங்கப்படும்.
லோக்சபா மழைக்கால கூட்டத்தொடரில் காவிரி நீர் பகிர்வு குறித்து விவாதிக்க, தனிப்பட்ட முறையில் டில்லி செல்கிறேன். காவிரி நீர், கர்நாடகாவின் உரிமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பான உண்மைகள், லோக்சபா உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.
'காவிரி நீர் பகிர்வு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் கட்டுப்பாட்டு குழுவும் முடிவெடுக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தெளிவுப் படுத்தி உள்ளது. அதற்கு ஏற்றபடி அரசு செயல்பட்டு வருகிறது. மேகதாது அணை திட்டம், கர்நாடகாவை விட தமிழகத்துக்கு அதிக நன்மை பயக்கும்.
எச்.எம்.டி., நிலம் தொடர்பாக அவர்கள் என்ன குற்றச்சாட்டுகள் வேண்டுமானாலும் முன்வைக்கட்டும். அவர்கள் இதை அரசியல் நோக்கங்களுக்காக செய்கின்றனர். தங்கள் செயல் திட்டங்களுக்காக என் மீது பழி சுமத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
