ADDED : ஏப் 01, 2026 03:37 AM

கர்நாடகாவில் பல ஆண்டுகளாக மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மூன்று மொழிகளை தாராளமாக படித்து பயன் பெறலாம். அதாவது, கன்னடம் முதல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும், மூன்றாவது மொழியாக ஹிந்தி, சமஸ்கிருதம் அல்லது ஏதாவது ஒரு மொழியை அவர்களே தேர்வு செய்து படிக்கலாம். அப்படி இருக்கையில், பலரும் ஹிந்தியை தேர்வு செய்து படிக்கின்றனர். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் ஹிந்தி கட்டாய பாடம் கிடையாது என்பது தான்.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாக அதிமேதாவிகள் சிலர் கூறுகின்றனர். இதை ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் கண்ணை மூடிக்கொண்டு நம்புகின்றனர். கன்னட அமைப்பினரும், கட்டாய ஹிந்தியை எதிர்க்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காங்கிரசின் திட்டம் இப்படி பலரும், 'ஹிந்தி திணிப்பு' என்பதை உரக்க சொல்ல துவங்கி விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை காங்கிரஸ் அரசும் கச்சிதமாக உபயோகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, மாநில கல்வி கொள்கையை, 2026 - 2027ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டு உள்ளது.
கர்நாடகாவில் மாநில கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டால், தமிழகம் போல இருமொழி கொள்கை கடைப்பிடிக்கப்படும். அப்போது, ஹிந்தி உள்ளிட்ட மூன்றாவது மொழியை கற்கும் வாய்பை மாணவர்கள் இழக்க நேரிடும்.
இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அதேசமயம், ஹிந்தியை விரட்டி விட்டோம் என்று காங்கிரஸார் வெற்று புகழ் பாடுவர்.
அரசியல் விளையாட்டு இப்படி, அரசியல் சுய லாபத்திற்காக மாணவர்களின் படிப்பில் காங்கிரஸ் விளையாடுகிறது .
ஏற்கனவே, இருமொழி கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறிவிட்டார். இதன் மூலம், கர்நாடகாவில் விரைவில் ஹிந்தி உள்ளிட்ட மூன்றாம் மொழியை கற்கும் வாய்ப்பு பறிபோகும் என்பது தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 3வது மொழிப்பாடத்தின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்ததும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
ஒரு ஆண்டு கஷ்டப்பட்டு படித்த மாணவர்களிடம், இறுதி நேரத்தில், 'அசால்ட்டாக' மதிப்பெண் கிடையாது என்று கூறியதை எந்த ஒரு மாணவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இது சத்தியம்.
இதையெல்லாம் பார்க்கும் போது, மாணவர்கள் யாராவது நாங்கள் ஹிந்தி கற்க மாட்டோம் என சொன்னார்களா அல்லது அவர்கள் பெற்றோர் தான் சொன்னார்களா என்ற கேள்வி இயல்பாகவே மனதிற்குள் எழுகிறது.
அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இருப்பினும், மாணவர்கள் வாழ்க்கையில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல.
- நமது நிருபர் -:
