/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சக ஊழியர் கேலி, கிண்டல் தலைமை ஏட்டு தற்கொலை
/
சக ஊழியர் கேலி, கிண்டல் தலைமை ஏட்டு தற்கொலை
ADDED : ஜன 09, 2026 06:32 AM

ஷிவமொக்கா: தன்னை பற்றி சக ஊழியர் கிண்டல் செய்ததால், ஷிவமொக்காவில் தலைமை ஏட்டு ஒருவர், போக்குவரத்து போலீஸ் நிலையத்தின் குளியல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொக்காவின் ஆர்.எம்.எல்., நகரை சேர்ந்தவர் முகமது ஜகாரியா, 55. ஷிவமொக்கா மேற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்தார். உடல் நல பாதிப்பால் இரண்டு மாதம் விடுமுறையில் இருந்தார். நேற்று முன்தினம் தான் பணியில் சேர்ந்தார். வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்தார். அதே போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர், ஜகாரியா குறித்து கேலி பேசிக் கொண்டே இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் ஒரு ஏட்டு, போலீஸ் நிலையத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அப்போது முகமது ஜகாரியா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், முகமது ஜகாரியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தற்கொலைக்கு முன், தன் மொபைல் போன் மூலம் தன் உயர் போலீஸ் அதிகாரிகள், உறவினர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நான், 26 ஆண்டுகளாக இத்துறையில் உண்மையாக பணியாற்றி வருகிறேன். கடந்த ஓராண்டுக்கு முன், எங்கள் போலீஸ் நிலையத்திற்கு நசீர் அகமது என்ற ஏட்டு பணியில் சேர்ந்தார். அவர், என்னை கிண்டல் செய்து, என்னுடன் சண்டையிட்டு வந்தார். பொது வெளியில் என்னை பற்றி அவதுாறு பிரசாரம் செய்து உள்ளார்.
உடுப்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது, பாதுகாப்பு பணிக்கு சென்றேன். அங்கிருந்த மற்ற ஊழியர்களிடம், என்னை விமர்சித்து பேசினார். இதனால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பின் மீண்டும் பணிக்கு திரும்பியதும், மறுபடியும் கிண்டல் செய்தார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தொட்டபேட் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., நிகில் கூறுகையில், ''ஜகாரியாவின் குடும்பத்தினர் புகார் அளித்தால், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவோம். துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது,'' என்றார். பிரேத பரிசோதனைக்கு பின், முகமது ஜகாரியாவின் உடல், தாவணகெரே மாவட்டம் சன்னகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

