ADDED : ஜூலை 19, 2026 11:31 PM
தந்தை கொலை: மகன் கைது
சித்ரதுர்கா நகரின் கல்குன்டே கிராமத்தில் வசித்தவர் சந்திரண்ணா, 65. இவரது மகன் பிரசன்னா, 39, காதல் திருமணம் செய்து தனியாக வசிக்கிறார். இவர், தந்தை பெயரில் உள்ள, 5 ஏக்கர் நிலத்தை, தன் பெயருக்கு எழுதி தரும்படி தொல்லை கொடுத்தார். இதற்கு தந்தை சம்மதிக்கவில்லை. நேற்று மதியம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த பிரசன்னா, கட்டையால் தந்தையை அடித்து கொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
மாட்டிறைச்சி பறிமுதல்
தார்வாடின், கெலகேரி பைபாஸ் அருகில், நேற்று முன் தினம் லாரியில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக தகவல் வந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்க் தள் அமைப்பினர் உதவியுடன், தார்வாட் நகர் போலீசார் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, பெருமளவில் மாட்டிறைச்சி இருப்பது தெரிந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர், கிளீனரை அழைத்து சென்று விசாரித்த போது, 100க்கும் மேற்பட்ட மாடுகளை கொன்று, அவற்றின் இறைச்சியை பெங்களூருக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.
விபத்தில் இளைஞர் பலி
பெங்களூரின் பெரடேன அக்ரஹாராவில் வசித்த அமின் பாரக், 20, தண்ணீர் 'சப்ளை' செய்யும் பணி செய்கிறார். இவர் நேற்று அதிகாலை ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில், சரக்கு வாகனத்தில் தண்ணீர் கேன்களை போட வந்தார். வாகனத்தை 'ஹேண்ட் பிரேக்' போடாமல் நிறுத்திவிட்டு, கேனை போட சென்ற போது, வாகனம் நகர துவங்கியது. இதை கவனித்த அமின் பாரக், வாகனத்தில் ஏறி நிறுத்த முற்பட்டார். ஆனால், எதிரே நின்றிருந்த வாகனம் மீது மோதினார். பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.
ரவுடி கைது
பெங்களூரின் கோடிகேஹள்ளியில் வசிக்கும் ரவுடி மணிகண்டா, 34, நேற்று முன் தினம் நள்ளிரவு ஆயுதங்களுடன் செல்வதாக, தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், ரவுடியை கொடிகேஹள்ளி அருகில் மடக்கி பிடித்தனர். அவரது பைக்கை சோதனையிட்ட போது, இரண்டு அரிவாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார், அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
