/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை
/
தலித் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை
ADDED : பிப் 05, 2026 06:56 AM
பெங்களூரு: சட்டசபை கூட்டம் நடந்த நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலை மையில், எஸ்.சி., - எஸ்.டி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடந்தது, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் மாற்றம் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து, சில மாதங்களால் சர்ச்சை நடந்தது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதால், முதல்வர் மாற்றம் சர்ச்சை தற்காலிகமாக நின்றுள்ளது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில், தலித் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடந்துள்ளது.
மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் உத்தரவுபடி, கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரில் நேற்று முன் தினம் இரவு நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பரமேஸ்வர், முனியப்பா, மஹாதேவப்பா, சிவராஜ் தங்கடகி, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா உட்பட, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பங்கேற்றனர். முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட் டது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
மாநில பட்ஜெட் இந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, இவர்களுக்கே பயன்பட வேண்டும். முதல்வர் மாற்றம் நடந்தால், தலித் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, கட்சி மேலிடத்திடம் வலியுறுத்த, இரவு நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்முறை மாநில பட்ஜெட்டில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கவும் முடிவு செய்தனர்.

