அதிகார போட்டியால் வளர்ச்சி பாதிப்பு: மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கோபம்
அதிகார போட்டியால் வளர்ச்சி பாதிப்பு: மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கோபம்
ADDED : ஜூன் 06, 2026 03:58 AM

மைசூரு: ''கடந்த ஆறு மாதங்களாக நிலவி வரும் அதிகார போட்டி, மாநிலத்தின் வளர்ச்சியை நிறுத்தி உள்ளது. பொருளாதார நிலையிலும், பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உடையார் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தை ஆட்சி செய்ய முழு பெரும்பான்மை பெற்ற போதும், காங்கிரசால் தனியாக தன் பதவி காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை. தவிர்க்க முடியாமல், மற்றொரு முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இது, கட்சிக்குள் இரு குழுக்கள் இருப்பதை காட்டுகிறது. ராமலிங்க ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா, அக்கட்சியின் உள் விஷயம்.
யாருக்கு எந்த பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கின்றனர். திறமை, ஆற்றலின் அடிப்படையில் அவர்களுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. அதை அவர்களால் நிர்வகிக்க முடியாவிட்டால், அந்த பணியை செய்ய தகுதி இல்லாத காரணத்தால், அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதாக கருதப்படும்.
மாநிலத்தில் பொருளாதாரம் தொடர்பாக பல பிரச்னைகள் உள்ளன. எங்கும் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. அமைச்சர் பதவிக்காகவும், அதிகாரத்தில் மட்டுமே குறியாக உள்ளனர். அடிப்படை வசதிகள் வழங்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்து உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியும் நடக்கவில்லை. இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது சரியல்ல.
இத்தகைய நிகழ்வுகள், மாநிலத்துக்கு நல்லதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இருப்பினும் அனைத்தையும் வெற்றிகரமாக்கி, நல்ல பணிகளை செய்வதே எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
