ADDED : ஜூன் 06, 2026 03:59 AM
பெங்களூரு: பல்லாரி மாவட்டம், கூட்லகி தாலுகாவை சேர்ந்தவர் ஆகாஷ், 23. இவர் கடந்த, 2024ல், டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், கர்நாடகா சார்பில் பங்கேற்றார். என்.எஸ்.எஸ்., அமைப்பில் சிறந்த தன்னார்வ சேவகர் என, ஜனாதிபதியிடம் விருது பெற்றவர்.
இவருக்கு விவசாய பட்டப்படிப்பில், அரசு கோட்டாவில் சீட் கிடைத்துள்ளது. பெங்களூரில் உள்ள ஜி.கே.வி.கே., எனும் விவசாய பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., படித்து வந்தார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தார். ஜி.கே.வி.கே., வளாகத்தில் பலாமரம் உள்ளது. இவர் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, பலாப்பழம் பறிக்க மரத்தின் மீது ஏறினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆகாஷை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் உயிரிழந்தார்.
எலஹங்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
