ADDED : செப் 05, 2026 03:36 AM

புதுக்கோட்டை: ''சட்டசபையில. ஏ.ஐ., கேமரா கண்ணாடியை, நான் பயன்படுத்தவில்லை,'' என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில், த.வெ.க., சார்பில் வென்ற முகமது பர்வேஸ், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'ஏ.ஐ.,' தொழில் நுட்ப வசதி கொண்ட கேமரா பொருத்திய கண்ணாடியை அணிந்து, சட்டசபைக்கு முகமது பரவேஸ் வந்ததாக தகவல் பரவி வருகிறது. இதற்கு, அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில், நேற்று முகமது பர்வேஸ் அளித்த பேட்டி:
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கையில், 15 அறிவிப்புகள் வெளியாகின. இன்னும் பல திட்டங்கள், தேவைப்படும் மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து நிறைவேற்றி தரப்படும்.
சில தினங்களுக்கு முன், தலைவலி காரணமாக கண் மருத்துவமனையில், கண் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது, மருத்துவர்கள் பரிந்துரைத்த கண்ணாடியை தான், தற்போது நான் அணிந்துள்ளேன்.
ஆனால், ஏ.ஐ., வாயிலாக கிராபிக்ஸ் செய்து, கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை, நான் சட்டசபையில் அணிந்ததாக வதந்தி பரப்பி வருகின்ற னர். நேரலையில், சட்டசபை நிகழ்வுகள் ஒளிபரப்பாகும்போது, ஏ.ஐ., கேமரா கண்ணாடியை, நான் ஏன் அணிய வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது. என்னைப்பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த வதந்தியை கிளப்பி விட்டவர்கள், உண்மையை ஏற்க மாட்டார்கள்; ஆனால், மக்கள் ஏற்றுக் கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
