நடிகர் பாஸ்கர் ஷெட்டி மீது இயக்குநர் மனைவி புகார்
நடிகர் பாஸ்கர் ஷெட்டி மீது இயக்குநர் மனைவி புகார்
ADDED : ஆக 28, 2026 11:26 PM
பெங்களூரு: கன்னட திரைப்பட இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவும், நடிகர் பாஸ்கர் ஷெட்டியும், நடிகர் தர்ஷனின், யோதா திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றினர். அப்போது இவர்களுக்குள் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. ஓம் பிரகாஷ் ராவ் மூன்று ஆண்டுகளுக்கு முன், பீனிக்ஸ் என்ற படத்தை தயாரித்தார்.
இதற்காக நடிகர் பாஸ்கர் ஷெட்டியிடம் கடன் கேட்டார். இவரும் தன்னிடம் இருந்த, 40 லட்சம் ரூபாய், நண்பர் வாசுதேவ ரெட்டியிடம் மூன்று கோடி ரூபாய் உட்பட, 3.85 கோடி ரூபாய் கடன் கொடுத்தார்.
மூன்று ஆண்டுகள் கடந்தும், பணத்தை கேட்ட போது ஓம் பிரகாஷ் ராவ் தன்னை திட்டி அவமதித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக பாஸ்கர் ஷெட்டி, பேடரஹள்ளி போலீஸ் நிலையத்திலும், திரைப்பட வர்த்தக சபையிலும் புகார் அளித்திருந்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில் இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவின் மனைவி டென்னிசா, பதில் புகார் அளித்துள்ளார். பெங்களூரின், ராஜராஜேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று அளித்த புகாரில் கூறியதாவது:
பாஸ்கர் ஷெட்டியும், வாசுதேவ ரெட்டியும் எங்கள் வீட்டில், அத்துமீறி நுழைந்தனர்.மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினர். தங்களின் கடன் முழுதுமாக அடைக்கும் வரை, எங்கள் வீட்டில் முகாமிடுவதாக மிரட்டினர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதன்படி நடிகர் பாஸ்கர் ஷெட்டி, வாசுதேவ ரெட்டி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
