கோலாரில் 6 தாலுகா நீதிமன்றங்கள்: மாவட்ட அமர்வு நீதிபதி தகவல்
கோலாரில் 6 தாலுகா நீதிமன்றங்கள்: மாவட்ட அமர்வு நீதிபதி தகவல்
ADDED : ஜூலை 02, 2026 11:11 PM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் உள்ள, 6 தாலுகா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்வு காண்பதற்காக மாநில சட்ட சேவைகள் ஆணையமும், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையமும் இணைந்து, ஜூலை 11ல், தேசிய லோக் அதாலத் அந்தந்த நீதிமன்றங்களில் நடத்தப்படும்,'' என, கோலார் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
கோலார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்தில் தேசிய லோக் அதாலத் மூலம், ஏராளமான வழக்குகள் வெற்றிகரமாக பைசலாயின. 7,442 காசோலை மோசடி வழக்குகள் தீர்க்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தில், கோலார் மாவட்டத்தின், 43 வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகள் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற உள்ள சிறப்பு லோக் அதாலத்தில் விசாரிக்கப்படும். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். காசோலை மோசடி வழக்குகள் மட்டும், ஜூலை 18 அன்று கோலாரில் நடக்கவுள்ள சிறப்பு லோக் அதாலத்'தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலர் பிரபு நீலாச்சாரி படிகர் கூறுகையில், ''லோக் அதாலத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வருவாய் துறை, மின்சார துறை உட்பட பிற துறைகள் தொடர்பான வழக்குகள் சமரசம் மூலம் தீர்வு காணப்படும்.
''குடும்ப சொத்து பிரிவினை, கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, ஜீவனாம்சம், விவாகரத்து, வாகன விபத்து இழப்பீடு, காசோலை முறைகேடு, நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகள் தீர்த்து வைக்கப்படும்,'' என்றார்.
