ஆர்.எஸ்.எஸ்.,சை திட்டி அமைச்சர்களாகினர் யதீந்திரா, பிரியங்க் மீது ஈஸ்வரப்பா பாய்ச்சல்
ஆர்.எஸ்.எஸ்.,சை திட்டி அமைச்சர்களாகினர் யதீந்திரா, பிரியங்க் மீது ஈஸ்வரப்பா பாய்ச்சல்
ADDED : ஜூன் 22, 2026 10:44 PM

ஷிவமொக்கா: ''பணம் கொடுத்து அழைத்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களால், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அதன்பின் அவர்களால் கட்சி பாழாகிவிட்டது. காங்கிரசுக்கும் அதே சூழ்நிலை ஏற்படும்,'' என முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மாநிலத்தின் மேம்பாடு குறித்து பேச வேண்டும். ஆனால் கர்நாடகாவில் எம்.எல்.சி.,க்களை விலைக்கு வாங்கும் வேலை நடக்கிறது. இதில், எந்த அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதை, பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதற்கு காங்கிரசில் இருந்து, 17 எம்.எல்.ஏ.,க்களை பணம் கொடுத்து, அழைத்து வந்தோம். இதனால் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அதன்பின் அவர்களால் கட்சி பாழானது. வரும் நாட்களில் காங்கிரசுக்கும் அதே நிலை ஏற்படும்.
தர்மஸ்தலா புனிதமான இடம். அங்கு சத்திய பிரமாணம் செய்ய வேண்டாம். மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தன் முடிவை கை விட வேண்டும். பக்தியை சோதிக்க கூடாது. தர்மஸ்தலாவில் சத்தியம் செய்துவிட்டு, அன்னப்ப சுவாமியிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். அந்த நடைமுறை நல்லதல்ல. இது என் ஆலோசனை.
மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுவதை கேட்டால், ஹிரண்யகசுபுவுக்கு கிடைத்த தண்டனையே, இவர்களுக்கும் கிடைக்கும் என, தோன்றுகிறது. பிரசாரத்துக்காகவும், கட்சி மேலிடத்தை மகிழ்விக்கும் நோக்கிலும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து, ஹரிபிரசாத்தும், பிரியங்க் கார்கேவும் பேசுகின்றனர்.
அம்பேத்கரின் அரசியலமைப்பு குறித்து தெரியாதவரை, நாம் உள்துறை அமைச்சராக பெற்றிருக்கிறோம். ஹரிபிராத்தும் திசை மாறுகிறார்.
ஹிந்து நாடாக விடமாட்டோம் என்கிறார். நாட்டில் காங்கிரசின் தோல்விக்கு இதுவே காரணமாகும். ஆர்.எஸ்.எஸ்.,சை திட்டியே யதீந்திராவும், பிரியங்க் கார்கேவும் அமைச்சர்களாகினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
