ADDED : ஜூன் 22, 2026 10:44 PM

துமகூரு: மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், சுவற்றில் தலையை மோதி பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவின் மடகசிரா அமிடலகொண்டி கிராமத்தில் வசித்தவர் கங்கம்மா, 62. இவரது பேரன் நரசிம்மமூர்த்தி, 26. இவர்கள் இருவரும், 18ம் தேதி, துமகூரின் பாவகடா கவுதட்டி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் தருமாறு கங்கம்மாவிடம், நரசிம்மமூர்த்தி கேட்டார். பணம் கொடுக்க மறுத்ததுடன் பேரனை, பாட்டி திட்டியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த பேரன், பாட்டியின் தலையை சுவரில் பலமாக முட்டினார். நிலை குலைந்து விழுந்த பாட்டி உயிருக்கு போராடினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பாட்டி இறந்தார். பாவகடா போலீசார் நரசிம்மமூர்த்தியை கைது செய்தனர்.
