/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு வாக்குறுதி தவறியதாக தந்தை வருத்தம்
/
அரசு வாக்குறுதி தவறியதாக தந்தை வருத்தம்
ADDED : ஜூன் 08, 2025 10:45 PM

பெங்களூரு : நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி விவகாரத்தில் அரசு வாக்குறுதி தவறியதாக அவரது தந்தை வருத்தம் தெரிவித்தார்.
தனக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பி தொல்லை கொடுத்ததால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, மீது நடிகர் தர்ஷன் கோபமடைந்தார்.
ரேணுகாசாமியை கடத்தி வந்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட, பலரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர்.
ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. அவரது தந்தை காசிநாத் சிவனகவுடா அளித்த பேட்டி:
மகனை இழந்த வருத்தம் எங்களுக்கு நிரந்தரமானது. பேரனின் குறும்புத்தனத்தை கண்டு, என் வலியை மறக்கிறேன். மாநில அரசு கொடுத்த வாக்குறுதிபடி நடக்கவில்லை. விரைவு நீதிமன்றம் மூலமாக, அரசு வழக்கை நடத்த வேண்டும்.
மனிதநேயம் அடிப்படையில், என் மருமகளுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கும்படி கோரினோம். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் வலியுறுத்தல். என் பேரனின் எதிர்காலத்துக்காக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.