ADDED : செப் 20, 2025 05:01 AM

தங்கவயல்: பலத்த மழை காரணமாக, பவர்லால்பேட்டையில் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார் வீடு நேற்று மாலை இடிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த வீட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாரும் குடியேறவில்லை; பூட்டியே வைத்திருந்தனர்.
மண் சுவராக இருந்ததால், பெருச்சாளிகள் நுழைந்து அடித்தளத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
நேற்றும், நேற்று முன் தினமும் தொடர்ந்து பெய்த மழையால் கட்டடம் பாதிக்கப்பட்டது. கீழ் பகுதி கட்டடம் இடிந்தது. இடிபாடுகளை அகற்ற பொக்லைன் இயந்திரம் செல்ல, போதிய இடம் வசதி இல்லாததால் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டனர்.
“ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தால் தான் கட்டட இடிபாடுகளை அகற்ற முடியும்,” என நகராட்சி ஆணையர் கூறிவிட்டு சென்றுவிட்டார். “அரசின் நிவாரண நிதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தால், என்னிடமே ரூபாய் கேட்கின்றனரே,” என, வீட்டு உரிமையாளரான முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் குமார் அங்கலாய்த்தார்.
