ADDED : ஜூன் 01, 2026 12:06 AM

- நமது நிருபர் -
வீ ட்டின் சமையல் அறை மட்டுமே உலகம் என்று இருந்த பெண்கள், தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதனை, முத்திரை பதிக்க ஆரம்பித்து உள்ளனர். ஒரு காலத்தில், வேலைக்கு செல்லவே தயங்கிய பெண்கள், தற்போது சுயதொழில் செய்து தொழில் முனைவோராக மாறி, தங்களின் கீழ் பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜெயசுதா.
பெங்களூருக்கு அருகில் உள்ள கோலாரின் மாலுாரை சேர்ந்தவர். 'செர்ரி' என்ற பெயரில் ராகி, தானியங்கள், தானிய மாவு, இட்லி பொடி உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
ஜெயசுதா கூறியதாவது:
நான் அதிகம் படித்தது இல்லை. குடும்பத்தின் சுமையை போக்க தினக்கூலி வேலைக்கு சென்றேன். கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார துறையின் கீழ் நடத்தப்படும், 'ஸ்வாலம்பனே' நிகழ்ச்சியில் ஒரு முறை பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில், பெண்கள், தொழில் முனைவோராக மாறுவது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்த பயிற்சிக்கு பின், நாமும் ஏன் சுய தொழில் ஆரம்பிக்க கூடாது என்று எண்ணம் தோன்றியது. ஸ்வாலம்பனே நிகழ்ச்சி நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.
உணவு தானியங்கள் தயாரிப்பது பற்றி பயிற்சி அளித்தனர். அரசின் நிதி உதவி பெற்று, ராகி, தானிய மாவு, இட்லி பொடி உள்ளிட்ட உணவு பொருட்களை தயார் செய்ய, தேவையான உபகரணங்களை வாங்கினேன்.
உயர்ந்த நிலை வீட்டிலேயே உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம், சிறிய அளவில் தொழில் முனைவோராக மாறி உள்ளேன். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. என்னிடம் நான்கு பெண்கள், வேலை செய்கின்றனர். யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய சூழ்நிலை இல்லை.
அரசின் சுயசார்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி, பெண்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்பது என் ஆசை. வரும் காலத்தில், என் தொழிலை பெருக்கி, நிறைய பெண்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருக்கிறேன். வேலையில்லாத பெண்கள் அனைத்து விஷயத்திற்கும், குடும்பத்தினரை நம்பி இருக்க வேண்டி உள்ளது. சுயதொழில் செய்வதால், அவர்களுக்கு என வருமானம் வருவதுடன், இந்த சமூகத்திலும் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
