ADDED : ஏப் 21, 2026 02:46 AM
மைசூரு: மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில், நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவின் சோமனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பிரதீக், 12. பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், என்.ஹொசஹள்ளி கிராமத்தில் உள்ள தன் மாமா பிரபாகர், 45, என்பவரின் வீட்டுக்கு பிரதீக் வந்திருந்தார்.
மாடுகளை குளிப்பாட்டுவதற்கு, நேற்று காலையில் பிரபாகர், கிராமத்தின் அருகில் இருந்த ஏரிக்கு சென்றார். அவருடன் பிரதீக்கும் சென்றிருந்தார். ஏரிக்கரையில் நடந்து சென்ற இவர், கால் தவறி, நீரில் விழுந்தார். இதை பார்த்து பீதியடைந்த பிரபாகர் நீரில் இறங்கினார். பிரபாகருக்கும் நீச்சல் தெரியாது.
சிறுவனை காப்பாற்றும் முயற்சியில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அங்கு வந்த கன்டசி போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், இருவரின் உடல்களை மீட்டனர்.
மைசூரு மாவட்டம், பிரியாபட்டணா தாலுகாவின் தொட்டகரவே கிராமத்தில் வசித்தவர்கள் கணேஷ், 22. இம்ரான், 28, இவர்கள் இருவரும் டைல்ஸ் ஒட்டுவது மற்றும் பெயின்டிங் பணி செய்து வந்தனர். இருவரும் நேற்று முன்தினம் மதியம், தங்கள் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
நீந்தும் போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து, பைலகுப்பே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆற்றில் தேடி கணேஷின் உடலை கண்டுபிடித்தனர். நேற்று காலை மீண்டும் தேடி, இம்ரானின் உடலை மீட்டனர்.

