ADDED : ஆக 30, 2026 11:28 PM
பெங்களூரு: நாகேந்திராவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக் கொண்டார்.
கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சித்தராமையா முதல்வராகினார். அவரது அமைச்சரவையில், பழங்குடியினர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா.
இவரது துறையின் கீழ் வரும் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 187 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையானார். மீண்டும் முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில், நாகேந்திரா இடம்பெற்றார். அவருக்கு திட்டம் மற்றும் புள்ளியல் துறை ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகளான, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை, மேல்சபையில் அவையை நடக்க விடாமல் அமளியில் ஈடுபட்டனர். அவரது ராஜினாமாவை வலியுறுத்தி, ராய்ச்சூரில் இருந்து பல்லாரி வரை, 170 கி.மீ.,க்கு, செப்., 1 முதல் பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், கடந்த 28ம் தேதி தனது அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்வதாக கண்ணீருடன் அறிவித்தார். அன்றைய தினமே முதல்வர் சிவகுமாரிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பித்தார். ராஜினாமா கடிதம்கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பப்பட்டது.
முதல்வரின் பரிந்துரை படி, அரசியலமைப்பு சட்டத்தின்படி ராஜினாமா கடிதத்தை கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொள்வதாக நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நாகேந்திராவில் காலியான அமைச்சர் பதவிக்கு, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள் கோரிக்கை எழுந்தது.
அந்த வகையில், சண்டூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அன்னப்பூரணாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
