/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வட மாவட்டங்களில் கன மழையால்... பரிதவிப்பு: வீட்டுக்குள் முடங்கிய கிராம மக்கள் சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு வெள்ளக்காடு!
/
வட மாவட்டங்களில் கன மழையால்... பரிதவிப்பு: வீட்டுக்குள் முடங்கிய கிராம மக்கள் சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு வெள்ளக்காடு!
வட மாவட்டங்களில் கன மழையால்... பரிதவிப்பு: வீட்டுக்குள் முடங்கிய கிராம மக்கள் சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு வெள்ளக்காடு!
வட மாவட்டங்களில் கன மழையால்... பரிதவிப்பு: வீட்டுக்குள் முடங்கிய கிராம மக்கள் சாலைகள், கிராமங்கள் துண்டிப்பு வெள்ளக்காடு!
ADDED : செப் 27, 2025 11:07 PM

கலபுரகி: கனமழையால் கர்நாடகாவின் வடமாவட்டங்கள் வெள்ளக்காடாகி உள்ளது. வீட்டுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர். பல பகுதிகளில் சாலைகள், கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாகல்கோட்டில் வீட்டின் சுவர் இடிந்து 10 வயது சிறுவன் பலியானான். 11 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கர்நாடகாவின் வடமாவட்டங்களான பீதர், பாகல்கோட், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாத்கிர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்கிறது.
அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் அங்குள்ள கொய்னா, உஜ்ஜனி அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் பீமா, கட்டபிரபா, மல்லபிரபா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீமா ஆற்றின் வெள்ளத்தால் கலபுரகி சித்தாபுராவில் பீமா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சன்னிதி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்கிருந்து விநாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், யாத்கிரின் வடகேரா தாலுகா நாயக்கல் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. அந்த கிராமத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
மாடியில் வசிப்பு இந்த வீடுகளில் வசித்து வரும் மக்கள், கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு, வீடுகளின் மாடிகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
'ஒவ்வொரு ஆண்டும் மழையால் பாதிக்கப்படுகிறோம். நிவாரண மையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு சரியான உணவு கிடைப்பது இல்லை; அடிப்படை வசதி களும் இல்லை. அங்கு சென்று கஷ்டப்படுவதற்கு பதிலாக, எங்கள் வீட்டின் மாடியில் வசித்து கொள்கிறோம்' என, பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.
நாயக்கல் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் ஐந்து அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது. பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதுபோல கலபுரகி ஜேவர்கி கட்டிசங்கவி பாலம் மூழ்கியுள்ளது. அந்த பாலம் வழியாக வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பீதர் - ஸ்ரீரங்கப்பட்டணா இடையே போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. யங்காஞ்சி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா, மஹாலட்சுமி கோவில்களை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விஜயபுராவின் அலமேலா தாலுகாவில் பெய்த கனமழையால் குமசாகி கிராமத்தில் 70 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வீடுகளில் வசித்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பீமா ஆற்றின் வெள்ளத்தால் குமசாகி கிராமத்தின் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்த வழியாக செல்லும் விஜயபுரா - கோலாபூர் சாலை மூழ்கியது. வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 3 கி.மீ., துாரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. விஜயபுரா மாவட்டத்தில் மழைக்கு 47 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இண்டி நகரின் அகர்கேடா சாலையில் உள்ள கிட்டங்கியில் வெள்ளம் புகுந்ததில், ஒரு கோடி மதிப்பிலான ரசாயன உரங்கள், மருந்துகள் சேதம் அடைந்தன.
மஞ்சள் அலர்ட் பாகல்கோட் மகாலிங்கபுராவில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தர்ஷன் லத்துார், 10, என்ற சிறுவன் உயிரிழந்தார். அவரின் தாய் பீமவ்வா படுகாயம் அடைந்தார்.
வடமாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்குள் மக்கள் முடங்கி உள்ளனர். சாலைகள், கிராமங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
நேற்று முன்தினம் காலை 8:30 மணியில் இருந்து நேற்று காலை 8:30 மணி வரை, கலபுரகி அன்வரில் அதிகபட்சமாக 13.25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
கலபுரகியின் அர்னகல்லில் 10.90 செ.மீ., ராய்ச்சூர் கோடாவில் 10.75 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பால், கதக், ஹாவேரி, தார்வாட், பெலகாவி, பாகல்கோட் ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6.45 செ.மீ., முதல் 11.55 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.