மனநலம் பாதித்தவர் மீது தாக்குதல் எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கண்டனம்
மனநலம் பாதித்தவர் மீது தாக்குதல் எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஆக 01, 2026 11:05 PM
பெங்களூரு: மனநலம் பாதித்த இளைஞரை, நிர்வாணமாக்கி தாக்கியதை, கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. 'ஜனநாயக நாட்டில் இப்படி நடக்க முடியுமா...' என, எஸ்.பி.,க்கு கேள்வி எழுப்பிஉள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்துார் நகரின், மசனாபுரா கிராமத்தில் வசிப்பவர் சந்துரு, 25. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், சட்ட மேதை அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவரை கிராமத்தினர் நிர்வாணமாக்கி தாக்கினர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை மீட்டு, மிரட்டினர்.
மாவட்ட எஸ்.பி., ' உன்னை ஊரை விட்டு வெளியேற்றுவேன். ரவுடி பட்டியலில் சேர்ப்பேன். குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வேன்' என எச்சரித்தார். அது மட்டுமின்றிசந்துரு மீது கிரிமினல் வழக்கும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டது.
இதனால் மனம் வருந்திய அவர், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
இவர் என்ன போலீஸ் அதிகாரியா; இப்படியா நடந்து கொள்வது... உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரி, இதுபோல பேசுவது சரியல்ல.
குற்றம் சாட்டப்பட்டவரை, ஊரை விட்டு வெளியேற்றுவேன், குண்டர் சட்டத்தில் சேர்ப்பேன் என, சாலையில் பகிரங்கமாக அரசியல்வாதியை போல எஸ்.பி., பேசியுள்ளார்.
இவர் காக்கி சீருடையை கழற்றி விட்டு, அரசியல்வாதிகளை போல உடை அணியட்டும். ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கிறது என்றால், சகிக்க முடியவில்லை.
ஒரு இளைஞனை நிர்வாணமாக்கி, கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்நாட்டில் இத்தகைய கொடூரங்கள் நின்று, பல காலம் ஆகிறது. நாட்டில் ஜனநாயகம் உயிருடன் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற செயலை, யார் செய்திருந்தாலும் குற்றம் தான்.
வழக்கு தொடர்பாக இளைஞர் மற்றும் கிராமத்தினர் தாக்கல் செய்த புகார், பதில் புகார் தொடர்பான விசாரணையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
